Showing posts with label அசிஸ்டெண்ட் டைரக்டர். Show all posts
Showing posts with label அசிஸ்டெண்ட் டைரக்டர். Show all posts

Sunday, 4 May 2014

தமிழ்க்கவிதைகள் #9: “இந்த வருடம் மழை குறைவு”

“இந்த வருடம் மழை குறைவு”
குறைந்த கூலிக்கு 
முந்திரிக்கொட்டை உடைப்பவளை
எனக்குத் தெரியும்
கடல் மீன்கள் விற்கும்
சந்தைக்கு வந்தால் புன்னகைப்பாள்
தூறல் நாட்களில்
மரச்சாலை வழியே

Saturday, 3 May 2014

தமிழ்க்கவிதைகள் #7: ப்ரியமுள்ள ஜிஜ்ஜுக்குட்டி..

ப்ரியமுள்ள ஜிஜ்ஜுக்குட்டி..
மிக்க தயக்கத்தோடுதான்
இப்படி அழைக்கிறேன்..
எப்படி இருக்கிறாய்..?
பேசத் துவங்கிவிட்டாயா..?
நாங்கள் ஆசைப்பட்டபடி
கிள்ளி முத்தா
கடிச்சு முத்தா
கொஞ்சி முத்தா

Tuesday, 1 April 2014

தமிழ்க்கவிதைகள் #6: பவதி பிக்‌ஷாம் தேஹி


எப்படியாவது 
இந்த புன்னகையை
தக்கவைத்துக் கொள்ள முயல்கிறேன்

சத்தியமாக எனது
இல்லாதவைகளை உன்னிடம் நான்
திணிக்கவில்லை
நீ அன்று உணர்ச்சிவயப்பட்டு
குத்தினாயே
அந்த
கத்தி மீதோ உன்மீதோ
எனக்கு எந்த புகார்களுமில்லை
நாம் வேடிக்கை பார்க்கும் ஆற்றில்
நாம் துப்பிய எச்சில்
எத்தனை விநாடிகளில்
காணாமல் போகிறது என்பதற்கு
எப்போதும் உன்னிடம்
நான் பந்தயம் கட்டியதில்லை

முடியவில்லை எனினும்
எப்போதும் தனியாகவே நடக்கிறேன்
முத்தத்தைத் தவிர உன்னிடம்
எதுவுமே ஏற்றதில்லை

உன் கால் கடிக்காத
செருப்பைப் போல அல்லாது
உன் கக்கத்தில் அறுக்காத
புதிய ஜாக்கெட்டைப் போலும் அல்லாது
நீ உள்ளே நுழைகையில்
ஏற்கெனவே எரியும்
விளக்கை போலதான் 
இருக்க விரும்பினேன்

நன்று
நடக்கட்டும்
என்னை நீர்ப்பதைக் காட்டிலும்
உன்னைக் கட்டமைப்பதே 
உனக்கு மிக நல்லது

பவதி பிக்‌ஷாம் தேஹி என்பதற்கும்
த்தா.. சோறு போட்றீ
என்பதற்கும் வேறுபாடு உண்டா என்ன..

Saturday, 29 March 2014

தமிழ்க்கவிதைகள் #5 : நான் என்ற அயோக்கியன்



நேற்று முதல்நாள்
வீடு திரும்பும் இரவில்
மிதமிஞ்சிய போதையால்
நிலைபிறழ்ந்த நண்பனை
எழுப்பவோ அல்லது
எழும்பாமல் படுக்கவைக்கவோ
போராடிய நண்பனைப் பார்த்தேன்.
கெட்ட வார்த்தைகளால்
அந்த போதை நண்பன்
உதவும் நண்பனை
செதுக்கி எடுத்ததைக்
கேட்டபடிதான் கடந்து போனேன்..
நேற்று காலையில்
பேப்பர் வாங்கப் போகையில்
அந்த குடிகார நண்பன் எழுந்து
அரக்கப் பரக்க
தன் சட்டைப் பை
பணத்தை தேடியபடி இருந்தான்.
எதுக்கு அவ்வளவு குடிக்கணும்
எதுக்கு இப்ப தவிக்கணும்
என்று நான் கேட்டபோது
ரொம்ப குடிக்கல சார்
யாவகம் எல்லாம்
நல்லாத்தான் இருந்திச்சு.
எவனோ ஒரு பரதேசி
ஃபிரண்டுன்ற மாதிரி
என்னை கொள்ளையடிச்சான்
அத்தனை போதையில
அதை தடுக்கமுடியாம
அவனை திட்டிக்கிட்டே இருந்தேன்
என்றான் அவன்..
களவும் கருணையும்
ஒருவடிவம் கொண்டது
எதற்காக என திகைத்து
அடுத்த சொல் பேசாது
வீடு திரும்பினேன்
நான் என்ற அயோக்கியன்..

Saturday, 22 March 2014

தமிழ்க்கவிதைகள் #4 : கேள்விகளும் பதில்களும்



இப்படியாகக் கழிகின்றன
என் 
எல்லாப் பொழுதுகளும்..

வைத்துவிட்டுப் போன புன்னகைகள்
திரும்பி வரும்முன்னே
நசுங்கிக் கிடக்கின்றன..

வந்து பார்க்கையில்
செடிரோஜாப் பூக்கள்
பாதிதான் இருக்கின்றன.

பொக்கிஷமான கண்ணீர்த்துளியை
யாரேனும்
சாக்கடையில் வீசிவிட்டுப்
போயிருக்கிறார்கள்.

தேடிச் சேர்த்த
கூழாங்கற்களை
கட்டிடம் கட்டப்
பயன்படுத்தி விட்டார்கள்.

என்ன மயிரு புன்னகை
இன்னொருக்க சிரிச்சிட்டாப் போச்சு
என்ன மயிரு ரோசாப்பூ
நாளைக்கு பூக்காமலா போகும்
என்ன மயிரு கல்லு
அதென்ன வைரமா
என்று சொல்லும் உங்களிடம்
என்ன பதில் சொல்ல

அந்தப் புன்னகை
இறந்தவனின் கடைசிப் புன்னகையென்றும்
அந்த ரோஜா
அச்செடி எனக்காகப் பூத்ததென்றும்
அந்த கூழாங்கற்களை
இறக்குமுன் அந்நதி
எனக்குத் தந்ததென்றும்
எப்படி விளக்க முடியும் உங்களிடம்

உங்கள் கேள்விகள் எளிமையானவை
என் பதில்களால் உங்களைக் கொல்ல
நான் விரும்பவில்லை.


Sunday, 9 March 2014

தமிழ்க்கவிதைகள் #3 : ஊமையாகிப் போன அலைபேசி


காலையிலிருந்து
அழைப்பே வராத
அலைபேசி வைத்திருப்பவனின்
அலைபேசியில்
548 எண்கள் இருக்கின்றன..

ஒரு வீட்டுமனை
வாங்கச் சொல்லுமொருத்தி..
உணவுக்கு காசில்லை எனினும்
உடலை சீர்செய்ய அழைக்குமொருத்தி..
மிகுதியாய் இருக்கும் பணத்தை
முதலிடச் சொல்லி 
கொஞ்சுமொருத்தி..
இவர்கள் யாவருக்கும்
அவனது எண் தெரியாமல்
போனதுதான் அவனது துக்கம்..

நடக்கையில் எதிர்ப்படும்
வேண்டாத நண்பரைத் தவிர்க்க
பொய்யான அழைப்பை
புனைந்து பேசியபடி
அந்த நண்பரிடம்
அப்புறம் பேசுகிறேன் என
ஜாடை செய்துவிட்டு
கடந்து பல நிமிடம் ஆனபின்னும்
கற்பனை அழைப்போடு
பேசியபடியேதான் இருக்கிறான் அவன்..

உணவு தராதவர்கள்
வேலை தராதவர்கள்
வேலை பார்த்தும்
கூலி தராதவர்கள்
இவர்களனைவரையும் விட
அவனை அழைக்காதவர்கள் மீது
கடுங்கோபம் வருகிறது அவனுக்கு..

என்றாவது ஒரு நாள்
யாராவதொருவர்
அழைத்துவிடுவார்களென்றே
இதுவரை அழிக்காமலிருக்கிறான்
அந்த எண்களை..

ஒரு முத்தமில்லை..
ஒரு கைகுலுக்கலில்லை..
அன்போடு பார்க்கும்
ஒரு பார்வை கூட இல்லை..
இவனே என அழைக்கும்
பெயரழைப்பும் இல்லை..

இவையனைத்தையும் விட
அலைபேசியில் அழைக்க
யாருககும் மனமில்லை..

ஊமையாகிப் போன
அலைபேசியில்
அழைப்பொலியாக
அம்மாவென்றழைக்காத
பாடலை வைத்திருக்குமவன்
தினந்தோறும் பெரு நம்பிக்கையுடன்
தன் அலைபேசியை
பார்த்தபடியிருக்கிறான்
ஏதாவதொரு அழைப்புக்காக..

விடிந்தும் இருண்டும் கடக்கும்
இந்த
ஏதாவதொரு நாளின் ஒரு ◌பொழுதில்
யாரேனும்
நிச்சயமாக யாரேனும்
தவறுதலாகவேனும் அழைத்துவிடக் கூடும்
என்பதால்தான்
உடைக்காமல்
எரிக்காமல்
நொறுக்காமல்
வைத்திருக்கிறான்
தன்
அலைபேசியை..

உலர்ந்த இதழ் நீட்டி
முத்தத்துககாக
காத்திருக்கிறதொரு
சூழல் அறியா
அலைபேசி..



Wednesday, 29 January 2014

தமிழ்க்கவிதைகள் #1 : பிரார்த்தனை



ஒரு பருந்தின் நிழல்
உங்களுக்கு 
ஓர் அழகான
வெளிக் கோட்டு ஓவியம்..
ஆனால் அதைப் பற்றி
கோழியிடம் 
நீங்கள் கேட்டு விடாதீர்கள்..

ஒரு பூனைக்கு
நீங்கள் தரும்
அன்பு முத்தம்
எலிகளுக்கு யுத்தப் பிரகடனம்.

நீங்கள் கையில் எடுக்கும்
பூச்சிக் கொல்லிகளைப் பற்றியும்
வண்ணத்துப்பூச்சிகளைப் பற்றியும்
நாம் பேச வேண்டாம்..
(அவைகளின்ஆன்மா சாந்தியடைவதாக..)

குருவிகளின்
ட்ரிட் ட்ரிடடுகள்
உங்களுக்கு
இரட்டை இரட்டை
ஒலிக் கோவைகள்..
ஆனால்
மற்றொரு குருவிக்கு 
அது
வாழ்நாள் செய்தி..

நீங்கள் குடியிருக்கும்
வீட்டுக்கு சொந்தக்காரர்
ஆறுமாதம் தேங்கிப்போன
உங்கள் 
வாடகைப் பணத்தைக்
கேட்க வருகிறார்..

உங்கள் வாழ்வின்
துயர்களை அவரிடம்
சொல்ல விழைகிறீர்கள்..
அவர்
எதையும் கேட்காமல்
உங்களுக்கான கெடுவை
நிர்ணயித்துப் போகிறார்..

இந்த 
சுழன்று பழசாகிப் போன
உலகில்
என்றென்றும்
நீங்கள் பேச வரும் சொல்
அர்த்தமற்றதுதான்..

இவ்வுலகம்
அமைதியுற
எனது பிரார்த்தனைகள்..



Related Posts